தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண்ணை 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அண்ணங்காரன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் வேல்முருகன்.
இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் வழியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரியா என்கின்ற ரோனாஜென் என்ற இளம் பெண்ணுடன் அறிமுகமானார்.
முதலில் நண்பர்களாக பழகிய இவர்களுக்குள் நாளடைவில் காதல் மலர்ந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இதையடுத்து வேல்முருகன் தனது பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார்.
அதே போன்று பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும் அவரது பெற்றோரிடம் சம்மதம் பெற இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் பாரம்பரியத்துடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்களும்,ஊர் மக்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.