சேலம் அருகே காதலித்து சுயமரியாதைத் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளமதி சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். காதலி இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் அவர் ஆஜராகியுள்ளார்.
இளமதி பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக அவரது வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.